
ஐபில்-2021 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 32 ரன்னுக்கும், ராபின் உத்தப்பா 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆரம்பம் முதல் இறுதி வரை அற்புதமாக ஆடிய டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
நிதிஷ் ரானா டக் அவுட் ஆகி வெளியேறினார் சுனில் நரேன் 2 ரன்களில் வெளியேறினார். ஷுப்மான் கில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
இறுதியில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு அதிகமான பரிசு தொகை வழங்கப்படும். இந்த சீசனின் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டு உள்ளது.
இரண்டாவது இடம் பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 12.50 கோடி ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

