தோனி கூறிய அந்த வார்த்தை.. ரசிகர்கள் உற்சாகம்!

ஐபில்-2021 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 32 ரன்னுக்கும், ராபின் உத்தப்பா 31 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஆரம்பம் முதல் இறுதி வரை அற்புதமாக ஆடிய டூ பிளெசிஸ் 86 ரன்கள் குவித்து கடைசி பந்தில் அவுட் ஆனார். மொயீன் அலி 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அதிரடியாக ஆடினர். வெங்கடேஷ் அய்யர் 50 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

நிதிஷ் ரானா டக் அவுட் ஆகி வெளியேறினார் சுனில் நரேன் 2 ரன்களில் வெளியேறினார். ஷுப்மான் கில் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

இறுதியில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் சென்னை அணி அபாரமாக வெற்றி பெற்று நான்காவது முறையாக கோப்பையை கைப்பற்றியது.

கோப்பையை பெற்ற பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி கூறியதாவது, நான் இன்னும் சென்னை அணியில்தான் இருக்கிறேன், எங்கும் போகவில்லை.

தென்னாப்பிரிக்கா, துபாய் என எங்கு விளையாடினாலும் ஆதரவு கொடுத்து வரும் சென்னை ரசிகர்களுக்கு நன்றி. அடுத்த ஆண்டு சென்னையில் மீண்டும் ரசிகர்கள் முன்பு விளையாடுவோம் என உற்சாகமாக கூறினார்.

மேலும், ஐபிஎல் 14வது சீசனில் கோப்பையை வெல்ல அனைத்து தகுதியும் கொண்ட அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ். தொடரின் ஆரம்பத்தில் தடுமாறினாலும், இறுதிப்போட்டி வரை சிறப்பாக விளையாடியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி என புகழ்ந்து பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *