திருத்தங்கள் இறுதி செய்யப்படும்வரை பயங்கரவாத தடைச் சட்ட பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும்

பயங்கரவாத தடைச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் இறுதி செய்யப்படும் வரை, அதன் பயன்பாட்டை இடைநிறுத்த வேண்டும் என கலாநிதி ஜெஹான் பெரேரா தலைமையிலான தேசிய சமாதானப் பேரவை வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு அச்சட்டத்தின் கீழ் எவ்வித விசாரணைகளுமின்றி நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய சமாதானப் பேரவையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கை ரீதியில் முக்கிய மாற்றங்களைச் செய்வதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருகின்றமை அண்மையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆற்றப்பட்ட உரைகளின் மூலம் வெளிப்பட்டுள்ளது என்றும் அந்தப் பேரவை தெரிவித்துள்ளது.

மேலும் நாட்டின் இனப்பிரச்சினைக்கு நிலைபேறான தீர்வை வழங்குவதற்கு மக்கள் மனங்களில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவது அவசியம் என்றும் தேசிய சமாதானப் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை தமிழ் மற்றும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சிகளும் தத்தமது நிலைப்பாடுகளிலேயே தங்கியிருப்பதைவிடுத்து, பொதுவான பிரச்சினைகளில் ஒருமித்த நிலைப்பாட்டிற்கு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *