சுமந்திரன் போன்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் முஸ்லீம்களை தனியான இனம் என இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந்தால் முஸ்லீம்கள் விரும்பாத வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள் என்றும் ஐக்கிய காங்கிரஸ் தலைவர் மௌலவி முபாரக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
கல்முனையில் அமைந்துள்ள ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழ் பேசும் மக்கள் என அண்மைக்காலமாக உரையாற்றி வருகின்றார்.
எனினும், முஸ்லீம்கள் தமிழ்பேசும் மக்களாக இருந்தாலும் அம்மக்களை தனியான இனம் என சுமந்திரன் போன்றவர்கள் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் அவ்வாறு ஏற்றுக்கொண்டிருந்தால் வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு கோரமாட்டார்கள்.
ஏனெனில், வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் 15 முதல் 17 வீதம் வரை குறைக்கப்படுகின்றார்கள் என்ற உண்மையை தெரிந்திருந்தும் கூட இவர்கள் வடகிழக்கு இணைப்பை வலியுறுத்தி வருகின்றார்கள் என்றால் அவர்களது வார்த்தையில் தமிழ் பேசும் மக்கள் என்பதற்கு உண்மையான அர்த்தமில்லை.
இவ்வாறு, தமிழ் பேசும் மக்கள் என கூறி முஸ்லீம் மக்களுக்கு ஒரு மாயாஜாலத்தை காட்டி முஸ்லீம்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்ற முயல்கின்றனர். என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.
அத்துடன், தமிழ் பிரதேச செயலக விடயத்தை நிறுத்தி ஒரு குடையின் கீழ் செயற்பட தைரியம் உங்களுக்கு உள்ளதா என்பதையும் கேட்க விரும்புகின்றேன்.
ஆனால், தமிழ் முஸ்லீம் மக்களை பிரிப்பதற்கு திட்டமிட்டு விட்டு ஊடகங்களில் ஒற்றுமை பற்றி பேசி வருகின்றீர்கள். தேர்தல் வருகின்றபோது ஒரு பேச்சும், அது முடிந்த பின்னரும் மற்றுமொரு பேச்சும் பேசுவது கூட்டமைப்பினருக்கு வழமையாகி விட்டது.
அத்துடன், தேர்தல் காலங்களில் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களாக மாறியும் விடுகின்றீர்கள். எனவே, உண்மையான உள சுத்தியுடன் இருந்தால் மூன்று விடயங்களில் உறுதியாக இருக்க வேண்டும்.
அதாவது, முஸ்லீம்கள் விரும்பாத வடகிழக்கை இணைக்க முயற்சிக்க மாட்டோம் எனவும், கல்முனை உப பிரதேச செயலகத்தை இரத்து செய்து ஒரு பிரதேச செயலகத்தின் கீழ் இயங்க முன்வர வேண்டும்.
தோப்பூர் பிரச்சினைக்குத் தீர்வுகாண உங்களால் முடியுமா, மட்டக்களப்பில் உள்ள முஸ்லீம்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு கண்டு விட்டு வாருங்கள், நாங்களும் தமிழ் பேசும் மக்களாக இணைந்து செயற்பட தயாராகவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கல்குடா தொகுதி பொறுப்பாளரும், கட்சியின் பிரதித் தலைவருமான சல்மான் வஹாப் மற்றும் கட்சியின் கல்குடா தொகுதி ஆலோசகர் முஹம்மத் ஹக்கீம் ஆகியோர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
வடகிழக்கு போராட்டம்: சுமந்திரன் ஏற்பாடு; மாவை தலைமை; த.தே.கூ ஆதரவில்லை!





