தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட்சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என பாற்சோறு சமைத்து, பட்டாசுகொளுத்தி சில தொழிற்சங்க பிரமுகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், இன்று என்ன நடக்கின்றது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
தலவாக்கலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், நாட்டில் உரத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், தேயிலை உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. ஆயிரம் ரூபா வழங்கப்படுவதும் இல்லை.
இந்நிலையில், பொருட்களின் விலையும் எகிறியுள்ளது. இதனால், தோட்டத் தொழிலாளர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மக்களுக்கு சுமைகளை திணிக்காமல், அரசாங்கம் நிவாரணம் வழங்க வேண்டும்.
நாட்டிலுள்ள ஆட்சியாளர்கள் என்ன செய்கின்றனர். கொரோனாவை காட்டித் தப்பிக்கப் பார்க்கின்றனர். பங்களாதேசிலும் பிரச்சினைதான். ஆனால், அங்குள்ளவர்கள் நாட்டை உரிய முறையில் நிர்வகிக்கின்றனர். இங்குள்ளவர்களுக்கு அதற்கான இயலுமை இல்லை.
தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என குறிப்பிட்டு பாற்சோறு சமைத்து, சில தொழிற்சங்க தலைவர்கள் பட்டாசு கொளுத்தினர். இன்று அந்த கொடுப்பனவு கிடைப்பதில்லை. 20 கிலோவுக்கு மேல் கொழுந்து பறிக்கவேண்டிய நிலைமை. தோட்ட முகாமைத்துவம் தொழிலாளர்களை தாக்குகின்றது. ஆளுங்கட்சியில் இருப்பவர்கள் மௌனம் காக்கின்றனர் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


