மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள ஆஸாத் நகர் சந்தியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையிலிருந்து அம்பாறை நோக்கி மீன் ஏற்றிச் சென்ற குளிரூட்டி வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இருந்த மின்கம்பத்தை இடித்துச் சென்று, வீடொன்றில் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
எனினும், வாகனத்தில் பயணித்த சாரதிக்கு சிறு காயம் மாத்திரம் ஏற்பட்டுள்ளது.
மீன் ஏற்றிச்சென்று விபத்துக்குள்ளான குளிரூட்டி வாகனமானது, மின் கம்பத்துடன் மோதியதில் மின்கம்பமும் அதில் பொருத்தப்பட்டிருந்த மின்பிறப்பாக்கியும் சேதமாகியுள்ளது.
இதனால் அதிகாலையிலிருந்து ஆஷாத்நகர் பகுதியில் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. மின்சார இணைப்பை சரிசெய்யும் வேலையில் மூதூர் மின்சார சபை ஊழியர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்தோடு குளிரூட்டியில் ஏற்றிச் செல்லப்பட்ட மீன்கள் கொட்டிக் கிடந்ததையும் காணமுடிந்தது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

