வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழந்த நிலையில் இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
அசன்பாவா வீதி பிறைந்துறையைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான எம்.ஐ.எம்.பாறுக் (வயது 47) என்பவரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
குறித்த நபர், வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக படகில் உயிரிழந்தார்.
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்த மீனவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
வாழைச்சேனை துறைமுகத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.
