தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் வடமாகாண பிராந்திய அலுவலகம் பளையில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வடக்கில் தெங்கு உற்பத்தியை பெறுமதி சேர்த்து ஏற்றுமதி செய்யும் நோக்கிலும், தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் பணிகளை மேம்படுத்தி வடக்கிலும் விஸ்தரிக்கும் நோக்கிலும் வட மாகாண பிராந்திய அலுவலகமொன்று அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் பளையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணம் இலங்கையின் 3ஆவது தெங்கு முக்கோண வலயமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்கள் இலங்கையில் அதிக தெங்கு உற்பத்தி செய்யும் மாவட்டங்கள் பட்டியலில் புதிதாக இணைந்துள்ளன.
இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் கருத்து தெரிவிக்கையில்,
வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரு வளம் இருகின்றது. அது தான் தென்னை. ஆனாலும், தென் பகுதியில் தென்னை சார்ந்த உற்பத்திகள் அதிமாக உள்ளது.
நம்மிடம் மூலப் பொருள் இருக்கின்றபோது நாமும் இந்த வளத்தை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதனால் வேலை வாய்ப்பும் கிடைக்கிறது.
இங்குள்ள உற்பத்தியை பெறுமதி சேர் நிறுவனங்கள் மூலம் வாழ்வாதாரமாக மாற்றும் முயற்சியில் நாம் இப்பொது இறங்கியுள்ளோம். அதேபோன்று பனைசார் உற்பத்திகளையும் நாம் விருத்தி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.