மலையகத்தில் காணி பிரித்து கொடுப்பது என்பது வெறும் அரசியல் நாடகம் என தோட்ட வீடமைப்பு மற்றும் சமூக வலுவூட்டல் ராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பிரதேச சபைக்குட்பட்ட 33 கிராம சேவகர் பிரிவுகளில் வாழும் மக்களுக்கு அரச சேவையினை இலகுபடுத்துவதற்காக நோர்வூட் பிரதேசத்தில் அம்பகமுவ கோரளை பிரதேச செயலக உப காரியாலயம் ஒன்று நோர்வூட் நிவ்வெளி பகுதியில் இன்று உத்தியோகப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு பிரத்தியேகமாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 10 வருட காலமாக வேறு அரசாங்கங்கள் தான் ஆட்சியில் இருந்தது. காணிகளை சுலபமாக பிரித்து கொடுக்க முடியுமென்றால் ஏன் காணிகளை பிரித்து கொடுக்கவில்லை.
மக்களை ஆசைக்காட்டி மோசம் செய்கின்ற செயல் என்னை பொறுத்தவரையில் நாட்கூலி நிலையிலிருந்து மாறி திறந்த முறைமைக்கு வர வேண்டும்.
இந்த வருடம் மாத்திரமன்றி கடந்த இரண்டு வருடங்களாக கோவிட் தொற்று பரவல் காரணமாக நாடு மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது அதனால் மக்கள் வாழ்வாதார ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அதிருப்தியாக தான் இருக்கிறார்கள் நாம் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆகவே, பிறக்கின்ற வருடத்தில் மக்களின் சுமைகளை எவ்வளவு குறைக்க முடியுமோ குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை சம்பள பிரச்சினைக்கு ஒரே தீர்வு கூட்டு ஒப்பந்தம் தான் என்பதனை நான் தெளிவாக கூறியிருக்கிறேன். ஆனால் நிறைய பேர் அதனை வேண்டாம் என்றார்கள் ஆனால் சமீபத்தில் நான் கேள்விப்பட்டேன் அது மீண்டும் கொண்டு வரவேண்டும் என்று ஒரு சிலர் தெரிவிக்கிறார்கள்.
இன்னும் ஒரு சிலர் வேண்டாம் என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கிறார்கள். இன்று தொழிற்சங்க கூட்டமைப்பு என்று ஒன்றும் உள்ளது.
ஆகவே நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது கூட்டு ஒப்பந்தம் வேண்டுமா? வேண்டாமா? என்று தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.






