2022ஆம் ஆண்டை வரவேற்பதற்காக 2021ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி இடம்பெற்ற கொண்டாட்டங்கள் காரணமாக நாட்டில் ஒமிக்ரான் தொற்றின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரிக்கும் எனபொது சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2022 ஆம் ஆண்டை வரவேற்கும் வகையில் கொழும்பிலும் ஏனைய இடங்களிலும் இடம்பெற்ற நிகழ்வுகளின்போது சுகாதார வழிகாட்டுதல்களுக்கு, நிகழ்வு அமைப்பாளர்கள் மற்றும் களியாட்டக்காரர்கள் கவனம் செலுத்தவில்லை.
சுகாதார அமைச்சின் வழிகாட்டுதல்கள் பெரும்பாலும் மீறப்பட்டன. உலகளாவிய ரீதியில் நேற்று முன்தினம் மாத்திரம் 10 மில்லியன் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற நிகழ்வுகள் காரணமாக தொற்றுக்கள் அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
இதேவேளை, தடுப்பூசி காரணமாகவே நாட்டில் கொரோனா இறப்புக்கள் குறைந்துள்ளன. எனவே தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாதவர்கள் அவற்றை செலுத்திக்கொள்ளுமாறும், பூஸ்டர் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.