உணவுவின் விலை ஏற்றத்தை தடுக்க தற்சார்பு பொருளாதாரமே சிறந்த வழி! சபா குகதாஸ்

நாட்டின் பொருளாதார அச்சுறுத்தலில் இருந்து மக்கள் ஓரளவு விடுதலை பெற ஒரே வழி தற்சார்புப் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடும்பங்களும் கூட்டாக கையில் எடுப்பது.

இவ்வாறு வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இலங்கைத் தீவின் ஏற்றுமதி இறக்குமதி பொருளாதாரக் கட்டமைப்பு டொலர் இல்லாமை காரணமாக முற்றாக முடங்கி வருகின்ற அபாய சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஏற்கனவே இறக்குமதிகளில் ஆயிரத்திற்கு அதிகமான பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள.

அத்துடன் உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலங்கள் ஆயிரக்கணக்கில் துறைமுகத்தில் காத்துக் கிடக்கின்றன.

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் தேயிலை, இறப்பர் , மற்றும் ஏனைய பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் கட்டணங்களை டொலரில் செலுத்த வேண்டிய கட்டாய நிலைமையால் இந்த ஏற்றுமதிகளும் டொலர் இன்மையால் தடைப்பட்டுள்ளன.

மொத்தத்தில் ஏற்றுமதி இறக்குமதி தடைப்படுவதால் வருமானம் இன்றி நாட்டின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் சென்று கொண்டு இருக்கின்றது.

பொருளாதாரச் சரிவும் பொருட்களுக்கான நிர்ணய விலை நீக்கமும் மக்களை வாழ்வாதார ரீதியாக பாரிய அளவில் பாதித்துள்ளது.

இதனால் மரக்கறி வகைகள் உள்ளடங்கலாக அடிப்படை உணவுப் பொருட்கள் நாளுக்கு நாள் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த பொருளாதார அச்சுறுத்தலில் இருந்து மக்கள் ஓரளவு விடுதலை பெற ஒரே வழி தற்சார்புப் பொருளாதாரத்தை ஒவ்வொரு குடும்பங்களும் கூட்டாக கையில் எடுக்க வேண்டும்.

நமது நாட்டிலே அதற்கு போதியளவு சாதகமான சூழல் காணப்படுகிறது.

உதாரணமாக யுத்த காலத்தில் வன்னியில் போக்குவரத்து பாதைகள் முடக்கப்பட்டு கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து பொருட்கள் கொண்டு செல்ல முடியாத சூழ்நிலை கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் காணப்பட்ட போது அந்த மக்கள் தற்சார்பு பொருளாதாரம் மூலமாக மரக்கறிகள் ,அரிசி, பால் முட்டை ,பழங்கள் ,இறைச்சி வகைகள், மீன் ,மூலிகை மருந்துகள், கைத்தறி நெசவு , மட்பாண்ட கைத் தொழில் , ஏனைய சுய தொழில்கள் எல்லாம் வன்னி மக்களின் சிறப்பான வாழ்க்கைத்தரத்தையும் சேமிப்பையும் உருவாக்கியது.

ஆகவே எல்லோரும் சிந்தித்து நீங்களும் வாழும் இடத்திலே சிறந்த தற்சார்புப் பொருளாதாரத்தை உருவாக்கி அதீத விலை ஏற்றத்தை தடுப்பதுடன் நாட்டின் உள்ளக பொருளாதாரத்தையும் குடும்பப் பொருளாதாரத்தையும் பாதுகாப்போம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *