ஐக்கிய அரபு அமீரக கப்பலை சிறைபிடித்த ஹெளதி கிளார்ச்சியாளர்கள்: விடுவிக்க கோரி சவுதி கூட்டணி வலியுறுத்தல்!

செங்கடலில் ஐக்கிய அரபு அமீரக கப்பலை, யேமனைச் சேர்ந்த ஹெளதி கிளார்ச்சியாளர்கள் சிறைபிடித்துள்ளதாக ஹெளதி இராணுவ செய்தித் தொடர்பாளர் யாஹியா சாரி தெரிவித்துள்ளார்.

கப்பல் ஹொடைடா கடற்கரையில் யேமன் கடல் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தது மற்றும் விரோத செயல்களை மேற்கொண்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணியின் செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மல்கி இதுகுறித்து கூறுகையில்,’ சொகோட்ரா தீவில் சவுதி அரேபியாவின் கைவிடப்பட்ட மருத்துவமனையிலிருந்து மருத்துவ உபகரணங்களை ஏற்றிக்கொண்டு வந்த கப்பலை ஹெளதி படையினர் கடற்கொள்ளை போல கைப்பற்றியுள்ளனர்.

கப்பலை ஹெளதி கிளர்ச்சியாளர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் படைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை சவுதி கூட்டணி மேற்கொள்ளும்’ என கூறினார்.

சவுதியின் உத்தியோகபூர்வ ஊடக முகவரால் மேற்கோள் காட்டப்பட்ட அறிக்கையில், நாட்டின் தெற்கு கடற்கரையிலிருந்து யேமனின் சொகோட்ரா தீவில் இருந்து கப்பல் பயணித்தது.

தீவில் ஒரு கள மருத்துவமனையை அமைப்பதற்கான பணியை முடித்துவிட்டு, மருத்துவப் பொருட்களை எடுத்துக்கொண்டு சவுதி நகரமான ஜசானுக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது இந்த கப்பல் சிறை பிடிக்கப்பட்டது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்த மோதல் மில்லியன் கணக்கானவர்களை இடம்பெயர்ந்து உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடியைத் தாங்கிய ரவாபி என்ற கப்பல், நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) 23.57 மணியளவில் ஹொடைடா மாகாணத்திற்கு அப்பால் இருந்தபோது திருட்டு மற்றும் கடத்தப்பட்டது’ என தெரிவிக்கப்படுகின்றது.

யேமனில் அரசாங்கத்துக்கு எதிராக யேமன் கிளர்ச்சியாளர்கள் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்துக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டணி படைகள் செயற்பட்டு வருகின்றன. அக்கூட்டணியில் ஐக்கிய அரபு அமீரகம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *