
இந்தியாவுக்கு அனுப்பும் முக்கிய ஆவணம் தொடர்பில் நாளை முடிவுகளை எடுக்க உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு தெரிவித்துள்ளது.
13ம் திருத்தம் என அறியப்படும், இலங்கை அரசியலமைப்பில் இடம் பெற்றுள்ள ஒரேயொரு அதிகார பரவலாக்கல் சட்டத்தை முழுமையாக அமுலாக்க, உரிய அறிவுறுத்தல்களை, இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரதான தரப்பு என்ற முறையில், இலங்கை அரசுக்கு கொடுங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்து, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ் பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் சார்பாக எழுதப்பட உள்ள, பொது ஆவணக்கடிதம் தொடர்பாக,கடந்த நவம்பர் 2ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற “திண்ணை கலந்துரையாடல்” முதல் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற கலந்துரையாடல்களில், முன்வைக்கப்பட்ட பல்வேறு வரைபுகளின் உள்ளடக்கங்கள் தொடர்பாகவும், அவை தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதபிரதிவாதங்கள் தொடர்பாகவும், இன்று மாலை மெய்நிகர் கலந்துரையாடல் மூலம் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமைக்குழு, நாளை அரசியல் குழுவை கூட்டி இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பது என தீர்மானித்துள்ளது.
இன்றைய மெய்நிகர் கலந்துரையாடலில் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வே. இராத கிருஷ்ணன் ஆகியோர் உள்ளிட்ட தலைமைக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.