ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்த வட கொரியா!

வட கொரியா ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக, மாநில ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) நடப்பு ஆண்டின் நாட்டின் முதல் பெரிய ஆயுத சோதனை முன்னெடுக்கப்பட்டதாக மாநில ஊடகமான கே.சி.என்.எ. குறிப்பிட்டுள்ளது.

இந்த ஏவுகணை 700 கிமீ (434 மைல்கள்) தொலைவில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகத் தாக்கியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானக் கட்டுப்பாடு மற்றும் குளிர்காலத்தில் செயல்படும் திறன் போன்ற வசதிகளையும் இந்த ஏவுகணை சோதனை உறுதிப்படுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் பொதுவாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட குறைந்த உயரத்தில் இலக்குகளை நோக்கி பறக்கும் மற்றும் ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்குக்கும் அதிகமான வேகத்தை அடைய முடியும். அல்லது மணிக்கு 6,200 கிமீ (மணிக்கு 3,850 மைல்கள்) பயணிக்கும்.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை விட நீண்ட நேரம் கண்டறிவதைத் தவிர்க்கக்கூடிய ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் இரண்டாவது சோதனை இதுவாகும்.

பியோங்யோங்கின் பாதுகாப்பை வலுப்படுத்துவதாக வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முன்னதாக சபதம் செய்திருந்த நிலையில் இந்த சோதனை வந்துள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அதிகரித்து வரும் ஸ்திரமற்ற இராணுவச் சூழல் காரணமாக, பியாங்யோங் தனது பாதுகாப்புத் திறனைத் தொடர்ந்து வலுப்படுத்திக் கொள்ளும் என கிம் புத்தாண்டு உரையில் கூறினார்.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை முடங்கிய நிலையில் வடகொரியா கடந்த ஆண்டு பல்வேறு ஏவுகணைகளை சோதனை செய்தது.

ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்கும் முயற்சியில் அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட சிறிய எண்ணிக்கையிலான நாடுகளுடன் வடகொரியாவும் இணைந்துள்ளது.

சியோலில் பாதுகாப்பு அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுவதற்கு முன்பு, சமீபத்திய ஏவுதல் புதன்கிழமை அதிகாலை ஜப்பானிய கடலோரக் காவல்படையால் கண்டறியப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *