அவுஸ்ரேலியா முதல் இன்னிங்ஸில் 416-8: துடுப்பெடுத்தாடுகிறது இங்கிலாந்து!

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியின், இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது.

இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து அணி, இன்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆட்டநேர முடிவில், ஸெக் கிரெவ்லி மற்றும் ஹசீப் ஹமீட் ஆகியோர் ஆட்டமிழக்காது 3 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணி 403 ஓட்டங்கள் பின்னிலையில் உள்ளது.

சிட்னி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 416 ஓட்டங்களை பெற்றிருந்த போது தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, உஸ்மான் கவாஜா 137 ஓட்டங்களையும் ஸ்டீவ் ஸ்மித் 67 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இங்கிலாந்துக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், ஸ்டுவர்ட் பிரோட் 5 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் எண்டர்சன், மார்க் வுட் மற்றும் ஜோ ரூட் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இன்னமும் 10 விக்கெட்டுகள் வசமுள்ள நிலையில், போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி, நாளை தொடரவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *