
அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை மறுசீரமைப்பின் போது, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வகித்து வரும் பெருந்தெருக்கள் அமைச்சு, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் உத்தேச அமைச்சரவை மறுசீரமைப்பு எதிர்வரும் 12 ஆம் திகதி இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சராக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்படவுள்ளார்.
இதனைத் தவிர முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு மேலும் சில அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படலாம் எனவும் பேசப்படுகிறது.
இதனடிப்படையில் அதிகளவான அமைச்சு பொறுப்புகளை கொண்டுள்ள அமைச்சராக பிரசன்ன ரணதுங்க இருப்பார் எனவும் தெரியவருகிறது.
இதனிடையே தற்போது இராஜாங்க அமைச்சராக பதவி வகித்து வரும் நிமல் லங்சாவுக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவி வழங்கப்பட வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எனினும், இது குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இவை அமைச்சரவை மறுசீரமைப்பு சம்பந்தமாக தற்போது காணப்படும் நிலைமை என்பதுடன் இந்த நிலைமை இறுதி நேரத்தில் மாற வாய்ப்புள்ளதாகவும் அரசாங்கத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளன.