மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அடுத்தவாரம் இடம்பெறவுள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் எம்.பிக்களும், அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ள அரவிந்தகுமார் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. வடிவேல் சுரேஷ் ஆகியோர் இச்சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.
மலையக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் உரிமைசார் விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன என தெரியவருகின்றது.
மலையக பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்திய அரசு முன்வந்துள்ளது.
இந்த நிதியை எந்தெந்த திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும், இது தொடர்பான கட்சிகளின் யோசனைகள் என்ன என்பன உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.
இதேவேளை அனைத்து மலையக பிரதிநிதிகளையும் ஒரே தடவையில் சந்திக்குமாறு ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.