சிங்கள பிக்குமாருக்கு என்றால் இரத்தம் தமிழருக்கு என்றால் தக்காளிச்சட்னியா? பொலிசாரிடம் மட்டக்களப்பு பண்ணையாளர்கள் கேள்வி …!samugammedia

பௌத்த பிக்கு பொலிஸாரின் தொப்பியை,ஸ்டாரை கழட்டு என கேடுகெட்ட வார்த்தைகளினால் திட்டும்போது அமைதியாக பார்த்துக்கொண்டிருந்த பொலிஸார் அமைதியான முறையில் போராட வந்த எங்களை அடக்குவதற்கு முற்படுவதானது இந்த நாட்டில் சிங்களவர்களுக்கு ஒரு சட்டம் தமிழர்களுக்கு ஒரு சட்டம் என்பதை வெளிப்படுத்துகின்றதாக மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு மயிலத்தமடு,மாதவனை பகுதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் சட்ட விரோத குடியேற்ற வாசிகளின் ஆக்கிரமிப்பினை தடுத்துநிறுத்துமாறு கோரி அப்பகுதியை சேர்ந்த கால்நடை பண்ணையாளர்கள் கடந்த 24நாட்களாக போராடிவருகின்றனர்.

இன்றைய தினம் செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகைதருகின்றதை முன்னிட்டு இன்று செங்கலடி-கொம்மாதுறை பகுதியில் பாரிய கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட பண்ணையாளர்கள்,மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,சிவில் அமைப்புகள்,பொது அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.

இதன்போது கொம்மாதுறை சித்திவிநாயகர் ஆலயத்திற்கு அமைதியான முறையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டு வீதித்தடைகள் போடப்பட்டு நீர்பாய்ச்சும் இயந்திரம்,கண்ணீப்புகை இயந்திரங்கள் கொண்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவு உள்ளதாகவும் வீதியை மறித்து போராடிமுடியாது எனவும் கோரிய நிலையிலேயே போராட்டமானது கடுமையாக மாறி பொலிஸாரின் தடையினை மீறிசெல்ல முற்பட்ட நிலையில் பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே முறுகல் நிலையேற்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் இழுபறி நிலையேற்பட்ட அதேநேரம் தடையினை உடைத்துச்செல்ல போராட்டக்காரர்கள் முற்பட்ட நிலையில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கமும் ஏற்பட்டது.

போராட்டத்தின் போது தடையினையுடைத்துச்செல்ல முற்பட்ட பொலிஸார் அவர்களை தடுத்த நிலையில் பெரும் களேபரம் ஏற்பட்டது.இதன்போது தடையினையுடைத்துச்செல்ல முற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவினர் சங்க தலைவி மீது பொலிஸார் தாக்குதல் முயற்சிகளை முன்னெடுத்தனர்.

இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்,அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் த.கலையரசன்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன்,சீ.யோகேஸ்வரன்,தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ்,தேசிய அமைப்பாளர் சுரேஸ்,அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கும் பொலிஸாருக்கும் இடையே கடுமையான வாய்த்தர்க்கம் ஏற்பட்டதுடன் கால்நடை பண்ணையாளர்களும் சட்டத்தரணி சுகாஸு டனும் வாய்கத்தர்க்கத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் காரணமாக வாழைச்சேனை-மட்டக்களப்பு பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டதன் காரணமாக மாற்று வழியூடாக போக்குவரத்துகள் மேற்கொள்ளப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *