கருணாவை பிரித்தது போல தமிழ் கட்சிகளைப் பிரிப்பதற்கு ஜனாதிபதி ரணில் முயற்சி…! சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு…!samugammedia

யுத்த காலத்தில் கருணாவை பிரித்தது போல தற்பொழுது இருக்கின்ற தமிழ் கட்சிகளைப் பிரிக்கின்றது போன்று ஜனாதிபதி ரணில் செயற்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்துக்கு முன்னும் பின்னரும்  இந்தியாவின் ரோலர் படகுகள் பவளப்பாறை உட்பட மீன் உற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக வடபகுதியில் உள்ள மீனவர்கள் பெரும் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

கச்சதீவில் கூட சுதந்திரமாக சென்று மீன் பிடிக்க முடியாத நிலையில் உள்ளதாகவும், நெடுந்தீவு கடப்பரப்பில் கூட மீன் உற்பத்தியில் பெரும்  வீழ்ச்சிகண்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், இதன் காரணமாக மீனவ குடும்பங்கள் தமது இலக்கை அடைய முடியாத நிலையில் காணப்படுகின்றதாகவும் தெரிவித்தார்.

தொழில் புரியும் பகுதிகள் அட்டைப்பண்ணைக்கு வழங்கப்பட்டு மீன் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளதாகவும், இந்த நிலையில் தமிழக சகோதரர்களுக்கு அப்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறுவது தமிழக மீனவர்களையும் இலங்கையில் உள்ள வடபகுதி தமிழ் மீனவர்களையும் அடி பட வைத்து தமிழ்நாட்டு தமிழர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்குமான ஒரு விரிசலை உருவாக்கும் நோக்கிலும், இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியா தமிழர்களுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவை அறுத்தறியும் நோக்கில் நரி தந்திரபாயங்களில் ரணில் மேற்கொண்டு வருகின்றார்.

யுத்த காலத்தில் கருணாவை பிரித்தது போல தற்பொழுது இருக்கின்ற தமிழ் கட்சிகளைப் பிரிக்கின்றது போன்று ஜனாதிபதி ரணில் செயற்பட்டு வருகின்றார்.

எங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்கள் மற்றும் எங்களோடு சேர்ந்து வரக்கூடிய அனைவரையுமே பிரித்து அவர்களுக்கிடையே கசப்பான உணர்வுகளை ஏற்படுத்தும் நோக்கிலே செயல்பட்டு வருகின்றார் எனவும், இந்திய மீனவர்களுக்கு எடுத்துரைத்து எங்களுடைய கடற்பரப்பில் எங்களுடைய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு இடையூறளிக்க வேண்டாம் என அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என தெரிவித்தார்.

    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *