முல்லைத்தீவில் யானைகளின் அட்டகாசம்: ஒன்றுதிரண்ட கிராம மக்கள்!samugammedia

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு, கர்நாட்டுக்கேணி  பகுதிகளில் யானைகளின் அட்டகாசத்தால் தென்னந்தோட்டம் நாசமாகியுள்ளது.இதனால் யானைகளின் அட்டகாசத்தை நிறுத்த தமக்கு வழிவகை செய்யுமாறு கோரி குறித்த கிராம மக்கள் இன்றையதினம் (18.10.2023) அப்பகுதியில் ஒன்று திரண்டிருந்தனர்.

குறித்த விடயம் தொடர்பில் அப்பகுதி மக்களால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று அழிவடைந்த நிலங்களை பார்வையிட்டதுடன் மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்திருந்தார்.

கடந்த இரண்டு மூன்று தினங்களாக கிராமங்களுக்குள் புகுந்த யானைகள் அப் பகுதியிலுள்ள தென்னந்தோட்டத்திற்குள் கூட்டமாக புகுந்து தென்னை மரங்களை  சேதம்  பண்ணியுள்ளது. குறித்த யானைகளின் அட்டகாசத்தால்  தென்னை மரங்கள் அழிவடைந்துள்ளதுடன், தென்னந்தோட்ட செய்கையில் ஈடுபட்டவர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

குறித்த பகுதியில் யானைகளின் அட்டகாசத்தால் கிட்டத்தட்ட 1600 க்கும் மேற்பட்ட தென்னம்பிள்ளைகள் அழிவடைந்துள்ளது. அத்தோடு 6 ஏக்கர் பயிரிடப்பட்ட கச்சான், ஒரு ஏக்கரில் பயிரிடப்பட்ட மாதுளை செய்கை என்பன முற்றாக அழிவடைந்துள்ளது. 

குறித்த பகுதியில் அடிக்கடி வரும் யானைகளினால் தமது தென்னந்தோட்டம் மட்டுமன்றி வாழ்வாதார பயிர்செய்கை நடவடிக்கைகளும் அழிக்கப்படுவதாக தெரிவிக்கும் அம் மக்கள், யானைகளினால் தாம் அப்பகுதியில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். 

குறித்த சம்பவ இடத்திற்கு  கொக்குளாய் விவசாய போதனாசிரியர் தனபாலசிங்கம் துளசிராம், கமக்கார அமைப்பின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன் போன்றோர் பாதிப்படைந்த இடத்தினை நேரில் சென்று பார்வையிட்டதுடன்  மக்களின் பிரச்சினைகளையும் கேட்டறிந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *