மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் மாணிக்கவாசகத்தின் நினைவாக 'மாணிக்கம் விருது' அறிமுகம்…!samugammedia

இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளராக பணியாற்றி மறைந்த பொன்னையா மாணிக்கவாசகம் நினைவாக மாணிக்கம் விருது அறிமுகப்படுத்தப்பட்டு சிரேஸ்ட ஊடகவியலாளர் தினசேன ரத்துகமகேக்கு வழங்கி வைக்கப்பட்டது.

வவுனியா ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் வவுனியா, குருமன்காடு பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் குறித்த நிகழ்வு இன்று(28) இடம்பெற்றது.

வவுனியா ஊடக அமையத்தின் ஆலோகராகவும், அதன் உருவாக்கத்திற்கு காரணமாகவும் இருந்த இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளாரான பொன்னையா மாணிக்கவாசகம் சுகயீனம் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் அமரத்துவம் அடைந்திருந்தார்.

அவரது நினைவாக வவுனியா ஊடக அமையமானது மாணிக்கம் விருதினை அறிமுகம் செய்து வழங்கி வைத்துள்ளது.

இலங்கையின் சிரேஸ்ட ஊடகவியலாளரும், BBC சிங்கள சேவை ஊடாக மக்கள் மத்தியின் நன்மதிப்பை பெற்றதுடன், மறைந்த ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகத்துடன் இணைந்து தமிழ் மக்களது பிரச்சனைகளை போர் காலத்திலும், போருக்கு பின்னரும் சிங்கள, ஆங்கில மொழி ஊடகங்கள் மூலம் உலகறியச் செய்து இன்று வரை ஊடகவியலாளராக பணியாற்றி வருவதை பாராட்டி வவுனியாவைச் சேர்ந்த தினசேன ரத்துகமகேக்கு குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த விருதானது சிரேஸ்ட ஊடகவியலாளர் அ.நிக்ஸன், மொனராகலை ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதீபா ஊடக வலையமைப்பு, திருகோணமலை ஊடகவியலாளர்கள், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஊடகவியலாளர்களின் சங்கமத்தோடு இடம்பெற்ற  நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் தினசேன ரத்துகமகேக்கு மறைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் பொன்னையா மாணிக்கவாசகம் அவர்களின் துணைவியார் மற்றும் யுஎஸ்சைட் நிறுவனத்தின் ஸ்கோர் வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ஜெ.கார்த்திகேயன் ஆகியோர் இணைந்து வழங்கி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *