ஒரு வருடத்திற்கு முன்னர் நாட்டு மக்கள் கஷ்டப்பட்ட போது உணர்வற்ற எதிர்க்கட்சியினர் கிரிக்கெட் விவகாரத்தில் அக்கறை காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதேவேளை கிரிக்கெட் தொடர்பான பிரச்சினையில் தற்போது எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் அடைய முயற்சிப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிரிக்கெட் சபை திருடர்களின் கூடாரம் என நான் இந்த சபையில் நேற்று தெரிவித்தேன். அதற்கான நடவடிக்கைகளை அமைச்சர் எடுத்துள்ளார். நீதிமன்ற தீர்ப்பு குறித்து நான் பேசப்போவதில்லை. அந்த முடிவுகளை விமர்சிக்க எனக்கு உரிமை இல்லை.
எதிர்க்கட்சித் தலைவர் கிரிக்கெட்டை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் பெற முயற்சிக்கிறார். கடந்த வருடம் நாட்டில் அதிகமான பிரச்சினைகள் ஏற்பட்டன. நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.
அப்போது ஒன்று சேராதவர்கள், அப்போது செய்தது போல் இப்பிரச்சினையிலும் அரசியல் ஆதாயம் அடைய முயற்சிக்கின்றனர். “ஹூ” என்று சொல்லி தமது இனத்தினை காட்டிக் கொண்டால் எனக்கு ஒன்றும் இல்லை.
நாட்டு மக்கள் கஷ்டப்படும் போது உணர்வற்ற எதிர்க்கட்சிகள் கிரிக்கட் விவகாரத்தில் உணர்ச்சி வசப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. விளையாட்டு அமைச்சரின் கருத்துடன் நாங்கள் உடன்படுகிறோம். ஆனால், நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ள பணிகளையும் நாம் செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரேரணை ஒன்றைக் கொண்டுவர வேண்டுமாயின் அதனைக் கொண்டு வாருங்கள். நாங்கள் அதற்கு எதிரானவர்கள் அல்ல. உதவி செய்வோம் எனவும் தெரிவித்தார்.