மாவீரர் நினைவேந்தல்கள்…! அச்சமின்றி அனைவரும் கலந்துகொள்ளுங்கள்…! அரியநேத்திரன் அழைப்பு…!samugammedia

மட்டக்களப்பு மாவட்டத்தில் துயிலும் இல்லங்களில் இம்முறை மாவீரர் நினைவேந்தல்கள் நடைபெறவுள்ளதனால் அச்சமின்றி அனைவரும் கலந்துகொண்டு இந்த மண்ணுக்காக உயிர்நீர்த்தவர்களை நினைவு கூருமாறு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் இந்த சிரமதான முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பட்டிப்பளை பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் புஸ்பலிங்கம் உட்பட கட்சியின் உறுப்பினர்கள்,இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தினை அழகுபடுத்தும் வேலைகளும் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த பா.அரியநேத்திரன்,

வடகிழக்கில்33 மாவீரர் துயிலும் இல்லங்கள் இருந்தன.அதில் சில இடங்களில் இன்றும் இராணுவ முகாம்கள் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில் 09துயிலும் இல்லங்களும் வடமாகாணத்தில் 24துயிலும் இல்லங்களும் இருந்திருக்கின்றது.2009 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்டபோது துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுவது தடைப்பட்டிருந்தது.இராணுவத்தினர் பல தடைகளை விதித்திருந்தார்கள்.

இந்த ஆண்டு வழமைபோன்று தடையுத்தரவுகளைப்பெறுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.

தமிழ் தேசிய பரப்பில் செயற்படும் பலருக்கு எதிராக தடைகளைப்பெற முயற்சித்தபோது வடகிழக்கில் எந்த நீதிமன்றங்களும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இறந்தவர்களை நினைவுகூருதல் ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் தடையுத்தரவுகளை வழங்கவில்லை.

துயிலும் இல்லங்களுக்கு அச்சமின்றி வந்து விளக்கேற்றுமாறு கோரிக்கையினை முன்வைக்கின்றோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவடிமுன்மாரி,தரவை,கண்டலடி துயிலும் இல்லங்களில் விளக்கேற்றுவதற்கான ஏற்பாடுகளை ஏற்பாட்டுக்குழு முன்னெடுத்துள்ளது.தாண்டியடி துயிலும் இல்லத்தில் விசேட அதிரடிப்படையினர் முகாமிட்டுள்ளதன் காரணமாக துயிலுமில்லத்திற்கு அருகில் நினைவேந்தலை செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மாவீரர்களை நினைவுகூரவேண்டியது தமிழர்களாக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாகவுள்ளது.அந்தவகையில் எல்லோரும் அந்தந்த பகுதிகளில் உள்ள துயிலும் இல்லங்களுக்கு சென்று வணக்கத்தை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *