புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அலிசப்ரி ரஹீம் எம்.பி அவசர கடிதம்…!samugammedia

கற்பிட்டியில் கட்டாக்காலிகள் தொடர்பில் கற்பிட்டி பிரதேச சபை மற்றும் பொலிஸார் இணைந்து வழங்கப்பட்ட அறிவித்தலை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் , புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் புத்தளம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த சில மாதங்களாக பெய்த கடும் மழை காரணமாக, கற்பிட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட பல தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.

சிறிய மழை பெய்தாலும் கூட கற்பிட்டி நகரம் உள்ளிட்ட தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கிவிடும்.

இந்த நிலையில், கற்பிட்டி பகுதிகளில் உள்ள ஆடுகள் , மாடுகள் மற்றும் கழுதைகள் என்பன வெள்ளம் காரணமாக தமது பட்டிகளில் இருந்து வெளியேறி பகல், இரவு நேரங்களில் நடுவீதிகள், பஸ் தரிப்பிடங்களில் படுத்துறங்குவதை காணக்கூடியதாக உள்ளது.

குறித்த ஆடுகள், மாடுகள் மற்றும் கழுதைகளும் இரவு நேரங்களில் தங்கி இருக்க கூடிய பட்டிகள் வெள்ளத்தால் மூழ்கியிருப்பதால்தான் அவை வெளியேறி நீர் தேங்காத இடங்களுக்குச் சென்று தரித்து நிற்பதை அறியக் கூடியதாக உள்ளது.

இந்த நிலையில், கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கற்பிட்டி பிரதேச சபை மற்றும் பொலிஸார் இணைந்து அறிவித்தல் வழங்கியுள்ளனர்.

இந்த திடீர் அறிவிப்பால் கால்நடை பராமரிப்பாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதற்கு சாதாரண காரணங்களும் உள்ளன.

எனவே, கட்டாக்காலிகளை கட்டுப்படுத்த பாதுகாப்பு தரப்பினர் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது பாராட்டுக்களை தெரிவிப்பதுடன், கற்பிட்டி பகுதியில் காலநடை பராமரிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட அறிவித்தல் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

கற்பிட்டி பகுதியில் தற்போது வெள்ளநீர் படிப்படியாக வழிந்தோடுவதால் நிலைமை வழமைக்கு திரும்பும் வரை கால்நடை பராமரிப்பாளர்களுக்கு இந்த விடயத்தில் கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

அதன் பின்பு கட்டாக்காலிகள் விடயத்தில் இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பாதுகாப்பு தரப்பினர் எடுக்கும் முயற்சிகள் அனைத்திற்கும் நாங்களும் முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம் எனவும் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீம் அனுப்பிய கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *