பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் சாதனை படைத்த தமிழ் மாணவர்கள்…! இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பாராட்டு…!samugammedia

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதரணதர பரீட்சையில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்ற தமிழர் தேசத்து மாணவர்களை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் ஆசிரிய சங்கத்தின் பொதுச் செயலாளர் சி.கணேசலிங்கம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

யுத்த காலங்களிலும், பேரிடர் காலங்களிலும் எமது தமிழர் தேசத்துக் குழந்தைகள் சாதனை படைக்கத் தவறுவதில்லை.அதற்காகப் பாடுபடும் ஒவ்வொரு ஆசிரியருக்கும், அதிபருக்கும், பெற்றோருக்கும் நாம் நன்றிகளைத் தெரிவிக்கத் தவறக்கூடாது.

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சையிலும் எமது மாணவர்கள் சாதித்துள்ளனர்.

போதைவஸ்துக்களும், அடக்குமுறைகளும் தலைவிரித்தாடும் இப்போதைய சூழ்நிலையானது ஆசிரியர்களுக்கு மிகுந்த சவாலாக உள்ளபோதும் அவற்றை முறியடித்து மாணவர்களை நல்வழிப்படுத்தி மிகச் சிறப்பான சாதனைகளைப் படைக்க வழியேற்படுத்தியுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில் 72வீதத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளமை மாணவர்களின் வழிதவறாத நடத்தைக்கும் அவர்களின் தொடர் கல்விப் பயண வாழ்க்கைக்கும் வழிசமைத்துள்ளது.

அதிலும் எமது மாணவர்கள் சிலர்  தேசிய ரீதியில் இடம்பிடித்துள்ளமை பெருமைக்குரியது.

இத்தகைய பெருமைக்குரிய மாணவர்களையும், அவர்களுக்குக் கல்வி ஊட்டிய ஆசிரியர்களையும்,  வழிப்படுத்திய அதிபர்களையும், கண்ணியமாக வளர்த்த பெற்றோர்களையும் பாராட்டுகின்றோம்.

இனிவரும் காலங்களிலும் இத்தகைய முயற்சிகள் தொடரவேண்டும். எனவும், அதன்மூலம் தமிழரின் பிரதான மூலதனமான கல்விவளம் பெருகவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *