இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலக வங்கியின் பிரதானிகளுள் ஒருவரான சரோஜ் குமார் ஜா தலைமையிலான தூதுக்குழுவினர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமானை இன்று (11.12.2023) சந்தித்து பேச்சு நடத்தினர்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இலங்கையில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கும், தடையின்றி நீரை விநியோகிப்பதற்கும் ஒரு இளம் அமைச்சராக முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்கள் பற்றி அவர் தெளிவுபடுத்தினார்.
அத்துடன், நீர்வழங்கல் தொடர்பான அனைத்து அரச திணைக்களங்கள், அரச நிர்வாக பொறிமுறை மற்றும் தனியார் துறையை ஒரு குடையின் கீழ் கொண்டுவந்து தனி அலகொன்றை ஸ்தாபிப்பதற்கான ஏற்பாடுகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக தெரிவித்த அமைச்சர், அதன் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் சம்பந்தமாகவும் எடுத்துரைத்தார்.
அதேபோல எதிர்கால திட்டங்கள் பற்றியும், அதற்கு உலக வங்கியின் பங்களிப்பு, ஒத்துழைப்பு, ஆலோசனை அவசியம் எனவும் உலக வங்கி தூதுக்குழுவினரிடம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.
ஐ.நாவின் நிலைபேண்தகு அபிவிருத்தி திட்டத்துக்குள் சுத்தமான குடிநீர் இலக்குக்கும் பிரதான இடம் வழங்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடைவதற்கு அமைச்சால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு உலக வங்கியின் ஒத்துழைப்பு தொடரும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது, அமைச்சின் செயலாளர் எஸ். சமரதிவாகர, ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க, சமூக நீர்வழங்கல் திணைக்கள தலைவர், நீர் திட்டத்தின் பொறியியலாளர் வசீப், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் பாரத் அருள்சாமி, பணிப்பாளர் லால் பெரேரா, உலக வங்கியின் பிரதிநிதிகள், பிரத்தியேக செயலாளர் மொஹமட் காதர் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.