யாழில் பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருளுடன் இளைஞன் கைது…!samugammedia

யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தி , இரண்டு நாட்கள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்ய நீதிமன்றில் அனுமதி பெற்று , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் ஹட்டன் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் வேலை செய்து வந்துள்ளார்.

குறித்த இளைஞன் கடையில் வைத்து போதைப்பொருள் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவதாக நெல்லியடி பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது. 

அதன் அடிப்படையில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார் அவரது உடைமையில் இருந்து 5 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டனர்.

விசாரணைகளின் பின்னர் , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் இளைஞனை முற்படுத்திய பொலிஸார் , மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் , சந்தேகநபரை இரண்டு நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதிக்குமாறு மன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர். 

அதனை ஏற்றுக்கொண்ட மன்று , சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதித்துள்ளது. 

பொலிஸ் காவலில் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் சந்தேகநபருடன் போதைப்பொருள் விற்பனை வலையமைப்பை சேர்ந்தவர்களை இனம் கொண்டுள்ளதாகவும் , சந்தேக நபரிடம் போதைப்பொருளை வாங்கி வந்தவர்களையும் இனம் கண்டுகொண்டுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *