பொலிஸ் காவலில் இருந்த 22 வயது இளைஞன் திடீர் மரணம்..! கதறும் உறவுகள் – நடந்தது என்ன..?

 

சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞன் ஒருவரின் மரணம் சந்தேகத்திற்குரியது எனக் கூறி கிராம மக்கள் நேற்றிரவு (30) அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஒன்று திரண்டுள்ளனர்.

அனுராதபுரத்தை சேர்ந்த ஷானுக கிஹான் மரம்பகே என்ற 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று காலை அனுராதபுரம் தலைமையக பொலிஸ் விசேட பிரிவு குற்றப்புலனாய்வு பிரிவினர் இந்த இளைஞனையும் மேலும் இரு இளைஞர்களையும் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.

பின்னர், அவர்களது உறவினர்கள் ​பொலிஸாரிடம் வந்து இளைஞர்களுக்குத் தேவையான உணவை கொடுத்துவிட்டு வீடு திரும்பியுள்ளனர்.

குறித்த இளைஞன் திடீர் சுகவீனம் காரணமாக அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 

விரைவில் வைத்தியசாலைக்கு வருமாறும் நேற்று மதியம் ஒருவர் உறவினர்களுக்கு தொலைபேசி அழைப்பின் ஊடாக அறிவித்துள்ளார்.

அவ்வறிவித்தலின் பிரகாரம் அவர்கள் அங்கு சென்ற போது இளைஞன் உயிரிழந்ததை அறிந்து கொண்டனர்.

எவ்வாறாயினும் உயிரிழந்த இளைஞன் பொலிஸ் அறையில் திடீர் சுகவீனம் காரணமாக நேற்று மதியம் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் உயிரிழந்த இளைஞரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் இருப்பதால் பாட்டி மற்றும் தாத்தா ஆகியோரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *