ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இஸ்ரேலின் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் மிரி ரெகேவ் (Brig. Gen. Miri Regev) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றையதினம்(16) இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஹமாஸ் போராளிகளால் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர்களை மீட்பதற்கு இலங்கை தொடர்ச்சியாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் காஸா பகுதியில் இடம்பெறும் மோதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பலஸ்தீன அரசை அமைப்பதற்கு இலங்கை ஆதரவளிப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதன்போது தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மற்றும் சர்வதேச அலுவல்கள் பணிப்பாளர் தினுக் கொழம்பகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.