எம்பிலிபிட்டிய – நோனகம வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை ஆசிரியை ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
எம்பிலிபிட்டிய நோனகம வீதியில் பெமினியன்வில பிரதேசத்தில் அவர்கள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த இந்த விபத்தில் 51 வயதான சமந்திகா ஜயசிங்க என்ற மூன்று பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு மரணித்தார்.
குறிப்பாக மாத்தறை புனித சர்வேஸ் கல்லூரியில் உயர் தர வணிகவியல் பிரிவின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதிபரான அவரது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளும் விபத்தின் போது காரில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த மூவரும் அம்பலாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், ஆசிரியை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டு இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.