தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை (21) மற்றும் நாளை மறுதினம் (22) மூடுமாறு வடமேற்கு ஆளுநர் அஹமட் நசீர் (Ahamed Nazeer) வடமேற்கு கல்வி அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் அடை மழை காரணமாக பெருமளவான பாடசாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், சுமார் 100 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு பாடசாலைகளை மூட ஆளுநர் தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, நிலவும் மழையுடனான வானிலையினால் எதிர்நோக்கும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் தமது செயற்பாட்டு அறைக்கு அறிவிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
அத்தோடு, சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் வலயத்தில் 213 பாடசாலைகளும் சிலாபம் வலயத்தில் 158 பாடசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.