நாட்டின் நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டி இருக்கின்றது- சிறீதரன்

நாட்டின் சட்டம் மற்றும் நீதி ஆகியன எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டிய நிலைமையே தற்போது காணப்படுகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (சனிக்கிழமை) யாழப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, கடலட்டை பண்ணை உருவாக்குவது குறித்து கடந்த 2017 மார்ச் 8ம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

அதில், கிளிநொச்சி மாவட்டத்தில் மாத்திரமே அதிகமான பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக 11 இடங்கள், கடலட்டை பண்ணைக்கு பொருத்தமான இடங்களாக கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை அரியாலையில் கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கம், அப்பகுதி பிரதேச செயலாளரின் அனுமதி பெறப்பட்ட பின்னரே இரண்டு பரப்பு காணிக்குள் கடலட்டை உற்பத்தி செய்ய நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இவ்வாறு கடலட்டை குஞ்சுகளை உற்பத்தி செய்ய யாழ் மாவட்டத்தில் அனுமதி பெற்றவர்கள், அதனைத் தாண்டி கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக் கிராமமான கெளதாரிமுனைக்கு வந்து, இரண்டு ஏக்கரை வலுக்கட்டாயமாக பிடித்துள்ளனர்.

அதாவது அப்பகுதி மீனவ சங்கங்களின் அனுமதியோ, பிரதேச செயலக அனுமதியோ இல்லாமல் இன்னொரு நாட்டை சேர்ந்த நிறுவனம் இடத்தை பிடித்துள்ளது.

அதற்கெதிராக முறைப்பாடு  அறிவித்தும் இதுவரை அவர்கள் கைது செய்யப்படவில்லை.

அவ்வாறாயின் இந்த நாட்டினுடைய சட்டம்,  நீதி எங்கு உள்ளதென்பதை தேடிப்பார்க்க வேண்டியுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply