பிரித்தானியாவில் சில்லறை விற்பனை அதிகரிப்பு!

பிரித்தானியாவில் சில்லறை விற்பனை மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் அதிகரித்துள்ளதாக தேசிய புள்ளிவிபர அலுவலகம் (ஓஎன்எஸ்) தெரிவித்துள்ளது.

யூரோ 2020 கால்பந்து தொடரை மில்லியன் கணக்கான மக்கள் பார்த்ததால், உணவு மற்றும் பானங்களுக்கான தேவை அதிகரித்தது. இதனால் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

மே மாதத்தில் வீழ்ச்சியைத் தொடர்ந்து விற்பனை, மாதத்திற்கு 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததை விட ஜூன் மாதத்தில் சில்லறை விற்பனை 9.5 சதவீதம் அதிகமாக இருந்தது.

ஜூன் மாதத்தில் மொத்த சில்லறை விற்பனை வளர்ச்சியில், மிகப்பெரிய பங்களிப்பு உணவு கடைகளிலேயே இருந்தது. அங்கு விற்பனை 4.2 சதவீதம் உயர்ந்தது.

விருந்தோம்பல் துறையில் சில கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட பின்னர், மே மாதத்தில் சுப்பர் மார்க்கெட்டுகளின் விற்பனை குறைந்துவிட்டது.

மாறாக, மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் உணவு அல்லாத கடைகளின் விற்பனை 1.7 சதவீதம் குறைந்துள்ளது. தளபாடங்கள் மற்றும் ஆடைகளுக்கான தேவை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை 2.3 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ஓஎன்எஸ் தெரிவித்துள்ளது. ஆனால், வாகன எரிபொருளின் விற்பனை தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளை விட 2.1 சதவீதம் குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *