![](https://i0.wp.com/newuthayan.com/wp-content/uploads/2021/09/unnamed-8.jpg?fit=512%2C237&ssl=1)
வீட்டுத்திட்டப் பணியாளர்களுக்கு– பணம் வைப்பிட்ட புத்தகத்தை
அங்கஜன்தான் வழங்குவாராம்!
யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படும் வீட்டுத் திட்டத்துக்குரிய நிதிகளை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட புத்தகத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் ஒருங்கிணைப்புக்குழு அலுவலகப் பிரதிநிதிகளே பயனாளிகளிடம் வழங்குவார்கள் என்று யாழ்ப்பாண மாவட்டச் செயலர் க.மகேசன் அறிவித்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீட்டுத்திட்டத்துக்கு தெரிவு செய்யப்பட்ட இறுதிப் பயனாளிகளின் பட்டியல் இணைத் தலைவர்களின் அனுமதி கிடைக்கப்பெற்றதும் பிரதேச செயலர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ள மாவட்டச் செயலர் க.மகேசன், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் கடந்த 15ஆம் திகதிய கடிதத்துக்கு அமைவாக சில நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலர்களைப் பணித்துள்ளார்.
தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு கொடுப்பனவுகளை வழங்கும்போது வங்கிப் புத்தகங்களை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அலுவலக உத்தியோகத்தர்கள் மூலம் பயனாளிகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கி அரசின் ‘சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத் திட்டங்களை’ தெளிவுபடுத்தவுள்ளனர் என்றும் அதற்கு பிரதேச செயலர்களை ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவட்டச் செயலர் கோரியுள்ளார்.
வீட்டுத்திட்டத்தில் அரசியல் தலையீட்டால் தகுதியற்றவர்கள் தெரிவு செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டுக் காரணமாக பயனாளிகள் பட்டியல் மீள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன் காரணமாக 300 இற்கு மேற்பட்டோர் நீக்கப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.