அதிகமான சிறுவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி தெரிவித்தார்.
கடந்த முதலாம் திகதி உலக சிறுவர் நாள் கொண்டாடப்பட்டது. இதில் தமிழர் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கிலும் இந்நாள் சிறப்புற நடைபெற்றது.
சிறுவர்களின் நிலை தொடர்பில் கருத்து தெரிவித்த ஜோசப் ஜெயகெனடி,
“அதிகமான சிறுவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருக்கிறார்கள். இதனை மாற்ற சிறுவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்” என வவுனியா மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஜோசப் ஜெயகெனடி தெரிவித்துள்ளார்.
“அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்களே எனும் தொனிப்பொருளில் இவ்வாண்டு உலக சிறுவர் தினம் கொண்டாடப்பட்டது. இது சிறந்த தலைப்பு. நாளைய உலகம் அவர்களுடையது, நாளைய தலைவர்கள் அவர்கள். எனவே அனைத்து விடயங்களிலும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மேலும் அவர்களை நோகடிக்கின்ற சம்பவங்களான சிறுவர் துஷ்பிரயோகம், வேலைக்கு அமர்த்துதல், இல்லங்களில் முடக்கி வைத்திருத்தல் போன்ற கோரமான செயல்களை இல்லாது செய்து அவர்களுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக நாங்கள் செயற்படுவோமாக இருந்தால், நிச்சயமாக குழந்தைகள் மகிழ்வார்கள். நாளைய சிறுவர்களுக்கான உலகம் சங்கமிக்கும் என நினைக்கிறேன்.
சமகாலத்தில் போதைப்பொருள் பாவனை, ஏனைய சிறுவர்களை வஞ்சித்தல் போன்ற பல்வேறு விடயங்களை செய்யும் நிலைக்கு சிறுவர்கள் தள்ளப்பட்டிருப்பது ஆரோக்கியமானதல்ல.
அண்மையில் இலங்கையினுடைய சிறைச்சாலைகள் தகவல்படி, அதிகமான சிறுவர்கள் சிறைச்சாலைகளில் இருக்கிறார்கள்” என்றார்.