திருகோணமலையில் திடீரென உயிரிழந்த 7 வயது சிறுவன்

திருகோணமலை – கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூபா நகரில் 7 வயது சிறுவன் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (02) மாலை பகல் சாப்பாட்டை உண்டு விட்டு தூங்கி எழும்பிய போது மயக்கமுற்ற நிலையில் சிறுவன் எழும்பியதாகவும் இதனையடுத்து கிண்ணியா தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இவ்வாறு உயிரிழந்த சிறுவன் கிண்ணியா கூபா நகர் பகுதியைச் சேர்ந்த நளீம் முகம்மட் நஸ்மிர் (07 வயது) எனவும் தெரிய வருகின்றது.

குறித்த சிறுவன் மரணித்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் பிசிஆர் பரிசோதனையில் சிறுவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இருந்த போதிலும் சிறுவன் மரணத்திற்கான காரணம் என்ன என்று தெரியாத பட்சத்தில் சிறுவனின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.முகம்மது ஷாபி கிண்ணியா பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

இதனையடுத்து சிறுவனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனை நிறைவடைந்தவுடன் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *